Tuesday, 25 February 2014

கருணை நதி பாகம் -7


பார்த்தீபன் என்ற பெயரைக்கேட்டதும் திவாவிற்கு அவளையே கண்டு கதைப்பதாகப் புத்துணர்வு கிளம்பிவிட்டது.'சொல்லடா மச்சான்'
'திவா நீ சொன்ன ஆளை கண்டு கதைச்சன். சுதாகர் சங்கவி. ஆள் இப்ப ஆனந்தகுமாரசாமி முகாம். எஸ் வலயம்.கொட்டில் இலக்கம் 66இன் கீழ் 2.'
'பார்த்தி டேய், அவ்வளவுந்தானா தெரியும்?'
'வேற என்ன தெரியணும்?'
'அவளேன் கொஸ்பிட்ரலுக்கு வந்தாள்?'
என்று தயங்கினான்.
'அவளுக்கேதும் பெரிய வருத்தமோ?'சிரித்தான் பார்த்தீபன்.'அப்பிடிஒண்டுமில்லடா. குருதி பரிசோதிக்கப் போனவள். முடிவு தெரியல்ல. நான் கதைக்க முயற்சித்தன். அவள் கதைக்க விரும்பேல்ல. திவா இனியாவதுஅவள்யாரெண்டுஎனக்குசொல்லனடா.''சும்மா.....பழக்கம்.அவளவுதான்டா மச்சான்''அப்பிடித் தெரியேல்ல எனக்கு. பரவாயில்ல. மலிஞ்சால் சந்தைக்கு வருந்தானே. அப்ப பாக்கிறன்' என்றான் நண்பன்.

                                    திவாவிற்கு புதிய உலகத்தில் பறப்பதைப்போல இருந்தது. பார்த்தீபனுக்கு நன்றிகூடச் சொல்லாமல் தொலைபேசியை வைத்துவிட்டான். திரும்பவும் பார்த்தீபனே எடுத்து சீண்டியபோதுதான் திவா தன் நினைவுக்கு வந்தான்.'பார்த்தீபன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்?' என்பதை நினைக்க திவாவிற்கு வெட்காக இருந்தது.
'சொரிடா மச்சான். உனக்கு நன்றியடா நன்றி நன்றி' என்று பலதடவை கூறினான்.'காதல் வந்தால் எல்லாம் மறந்திரும்தான். பரவாயில்ல உன்ர நிலை புரியிதுடா. ஓ.கே. பாய்' என்று விடைபெற்றான் பார்த்தீபன்.
இப்போது அவனது மனம் ஓரளவு குளிர்ந்தது. சங்கவிக்கு உடனே ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று காகிதமும் பேனையுமாய் குந்தியவன் என்னவென்று எழுதுவதெனத் தெரியாமல் தவித்தான். பின்பு,

                                                                                    அன்புடன் சங்கவிக்கு என்று எழுதத் தொடங்கினான். உனது தியாகத்தால் நான் நலமாக இருக்கின்றேன். நீ எப்படி இருக்கின்றாய் என்று அறிய ஆவலாய் இருக்கின்றேன். உனக்கு என்னை யாரென்று நினைவிருக்காது. எனினும் என்னைப்போல பலபேரை காப்பாற்றி இருப்பாய். அவர்களின் வாழ்வுக்காக உன் வாழ்வின் வசந்தங்கள் பலவற்றை நீ இழந்திருக்கலாம். நானும் எனது குடும்பமும் உன்னை என்றுமே மறந்துவிட முடியாது. என் உடலில் உன் குருதி கலந்திருக்கிறது. நாம் இருவேறு உடல்கள். ஒரு உயிர்தான் என்று உணர்கின்றேன். காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மானப் பெரிது என்பார்கள். சங்கவி உன் உதவிiயை நான் வாழ்நாள் உள்ளவரை மறக்கவே மாட்டேன்.அதுசரி சங்கவி,உனக்கு என்ன நடந்தது? வன்னிப்போரில் கடைசிநாள்வரைக்கும் ஒரு வைத்தியராக இருந்து எத்தனை உயிர்களை காப்பாற்றியவள் நீ. எத்தனை பேருக்கு ஆலோசனைகளையும் ஆறுதலையும் தந்தாய். இன்னும் எத்தனை பேர் உன் பெயரைச்சொல்லி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
                              கண்ணே, நீ மட்டும் எதற்காக இப்படி இருக்கிறாய்? என்னால் இதனை தாங்க முடியவில்லை. உன்னாலும் மனுசியாக வாழமுடியும். என்னைப்போல சுயநலமாக வாழ்ந்து திரிந்தவளல்ல நீ. உயிரே மிச்சமென ஊசலாடிய அவகாசமற்ற அந்தப் பொழுதிற்கூட ஓயாது உழைத்தவள் நீ. எந்த மனிதனின் நெஞ்சில்தான் கவலைகள் இல்லை சொல்லு. எல்லோரும் பைத்தியகாரர்கள் ஆகிவிட முடியுமா? விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத்தான் வேண்டும். அவல வாழ்க்கைக்குள் மூழ்கிப்போகும் சில உள்ளங்கள் அதிலிருந்து விடுபடத் துணிவிருந்தாலும் கடந்தகால நினைவுகள் அவர்களை எழுந்திருக்க விடுவதில்லை. மற்றவர்களுக்காக ஓயாமல் எழும் எண்ணங்கள் தனக்கென வரும்போது மட்டும் மௌனித்துப்போகின்றன.
                                      வாழ்க்கை ஒரு சவால். துணிந்து செயற்படுபவனே சாதிக்க முடியும். வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதனை நடைமுறைப் படுத்துபவனுக்கல்லவா அதன் கடினம் புரியும் என்று நீ பேசுவது எனக்குக் கேட்கிறது. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி நடக்கப்போவதைச் சந்திப்போம். ஏன் சங்கவி உனது தொழிலை தொடர்ந்து செய்ய நீ முயற்சிக்கவில்லையா? நீ வாழாவிட்டாலும் மற்றவர்களுக்காக உருகும் மெழுகுவர்த்தியாய் இருக்க முயற்சி செய். எப்பொழுதும் நீ நீயாகவே இரு. எமது விடுதலைப் போராட்டம்தான் தோற்றுவிட்டது. உணர்வுகள் சாகடிக்கப்பட்டு விட்டாலும் உணர்வுகள் சாகா வரம்பெற்று இருக்க வேண்டும். நான் இதைச் சொல்ல, அதுவும் உனக்குச்சொல்ல அருகதை அற்றவன்தான். இதுவரை பச்சைச் சுயநலவாதியாகவேதான் இருந்தேன். இனிமேலாவது திருந்தி வாழவேண்டும் என்று முயற்சிக்கின்றேன். தயவுசெய்து நீ மாறிவிடு. சொல்வதற்கு நீ யார் என ஏளனமாகச் சிரிக்கிறாயா? சொல்கிறேன். நான் யாரென்று சொல்கிறேன்.
                                                                         இடம்பெயர்ந்து பல வடுக்களைத் தாங்கிய வன்னி மக்கள் இனி எதுவுமே தேவையில்லை. உயிர் மட்டும் போதும் என்ற நிலையில்தானே போரின் இறுதிநாட்களில் இருந்தார்கள். அது உண்மைதான். அலுவலகங்களோ பாடசாலைகளோ இயங்கவில்லை. உயிர் வாழ்விற்கான அத்தியாவசியத் தேவைகளை மட்டும் பயந்து பயந்து செய்து முடித்தார்கள். அநேகமான நேரங்களை காப்பகழிகளில்தான் கழித்தார்கள். நான்கூட என் உயிரைப் பாதுகாக்க அப்படித்தான் இருந்தேன். ஆனால் நீ அப்படி வாழவில்லை. மருத்துவமனையில் விளக்கேந்திய பெருமாட்டியாய் இரவு பகலாய் கண்விழித்து நின்றவள்.  சீறிவரும் சன்னங்களுக்கும் சிதறிப்பாயும் குண்டுகளுக்கும் நடுவே நின்று வேலை செய்தவள். சேவை செய்தவள்.
நானும் எனது குடும்பமும் முள்ளிவாய்க்காலில் பதுங்குகுழி ஒன்றின்மேல் தறப்பாளைக்கட்டி பதுங்கு குழிக்குள்ளேயே இருந்தோம். எங்களிடம் எஞ்சியிருந்தது ஒரு தறப்பாளும் ஒரு பானையும் சட்டியும் மூன்று கோப்பைகளும் மட்டுமே. உன்னிடம் அதுவும் இருந்திருக்காது. எறிகணைகளோ தாறுமாறாக விழுந்துகொண்டிருந்தன. அன்றும் வழமையைப்போல காலை ஆறு மணியிலிருந்து நண்பகல்வரையும் வெளியில் தலை காட்டவே முடியவில்லை. எனது தங்கையின் பிள்ளை பவிதாவைச் சமாளிப்பது எல்லோருக்கும் பெரிய சிரமமாக இருந்தது.
'வெளிய போகப் போறன். நான் வெளிய போகப் போறன்.' என்று அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தாள்.

                                                   'அழுதால் அழட்டுக்கும். பிள்ளை ஒண்டும் கரைஞ்சு போயிடாது. வெளிய போகவிட வேணாம்.' என்று அம்மா இரைந்தார். என்னாலும் தொடர்ந்து காப்பகழிக்குள் இருக்கமுடியவில்லை. ஒரே குழிக்குள் பன்னிரண்டுபேர் இருந்தோம். கால்கைகளை அசைக்கக்கூட இடமில்லாத நெருக்கடியில் அதிக நேரத்திற்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. முழங்கால்கள் மடிந்தபடியே நீண்டநேரம் இருந்ததால் மூட்டுகள் வலித்தன. என்னடா நரக வாழ்க்கை இது என்று விரக்தியும் சலிப்பும் எழுந்தாலும் உயிரை காப்பாற்றிக் கொள்தற்காக அந்த வலிகளையும் சகித்துக்கொண்டு கிடந்தோம்.
பகற்பொழுது கழிந்து மாலையாகியபின்னும் கடற்கரையில் வெயில் தாளவில்லை. ஒவ்வொருவராக வெளியில் வந்துநின்று பெரூமூச்சுகளை விட்டுக் கொண்டோம். எமக்காகவே குறிபார்த்து எறியப்பட்டதைப்போல எறிகணையொன்று திடீரெனக்கூவிவந்து எமக்கருகில் வெடித்துச்சிதறியது.

                                                           திவாவினால் தொடர்ந்து எழுத முடியவில்லை. அவ்வளவுநேரமும் எழுதிய      தனது பழைய நிலைமையை மீண்டும் நடப்பதைப்போலவே உணர்ந்ததனாலோ என்னவோ மனம் பதறியது. உடல் மிகவும்சோர்ந்துபலவீனப்பட்டது.விரல்கள்பேனைபிடிக்கக்கூடவலுவற்றுவிட்டனபோல உழைந்தன..............................தொடரும் ...........................

மிதயா கானவி

No comments:

Post a Comment